பிரகீத் கடத்தல் சம்பவம்- சிறிலங்கா இராணுவத் தளபதியின் ஒத்துழைப்பை கோருகிறார் மனைவி
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகளுக்கு உதவுமாறு அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம், கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்து அவர், எழுத்துமூலமாக இந்தக் கோரிக்கையை கையளித்துள்ளார்.
”2010ஆம் ஆண்டு பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய், 8 ஆண்டுகளாகியும், அவரது நிலையைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பாதுகாப்புப் படைகள் ஒழுக்கமானது என்று மதிக்கிறேன். ஒரு சில நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த படைகளினதும், மதிப்பு பாழடிக்கப்படக் கூடாது,
எனவே, பிரகீத் என்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பானவர்களை கண்டறியும் விசாரணைகளுக்கு இராணுவத் தளபதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, எந்தவொரு விசாரணைகளுக்கும் சிறிலங்கா இராணுவம் பக்கசார்பின்றி நிச்சயமாக ஒத்துழைப்பு வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் தவறு செய்திருந்தால், அவர் உயர்நிலையில் இருந்தாலும், கீழ் நிலையில் இருந்தாலும், தண்டிக்கப்படுவார். குண்டர்களின் இராணுவத்தை என்னால் வழிநடத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.