யாழ். கோட்டையில் உணவுத் திருவிழா நடத்தும் சிறிலங்கா இராணுவம்
யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால், யாழ்.உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது. வரும் 15ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை இந்த உணவுத் திருவிழா இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையகம் இந்த உணவுத் திருவிழாவை நடத்தவுள்ளது.
யாழ். கோட்டைக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகளுக்கும் சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.
வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் சிவில் மற்றும் வணிகச் செயற்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என்று அனைத்துலக அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், யாழ்ப்பாண உணவுத் திருவிழா என்ற பெயரில் புதிய வணிக முயற்சியில் சிறிலங்கா இராணுவம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.