அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்
எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு எதிரான மனுக்கள் மீளப் பெறப்பட்டதை அடுத்து, அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்த சிறிலங்காவின் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அரசிதழுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவை அடுத்து, 93 உள்ளூராட்சி சபைகளுக்கு மாத்திரம் வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
அரசிதழுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஏற்கனவே 93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை கோரி வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் திருத்தம் செய்யப்படும்.
எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனுக்களை கோரும் நாட்களை உள்ளடக்கிய புதிய அறிவிப்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.
அத்துடன், முன்னதாக உள்ளூராட்சித் தேர்தலை ஜனவரி 27ஆம் நாள் நடத்தும் திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டவுள்ளது.
பெப்ரவரி மாதத்தின் முதலாவது சனிக்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.