இந்திய- சிறிலங்கா படைகளின் ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி புனேயில் வெள்ளியன்று ஆரம்பம்
இந்திய- சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடையிலான ‘மித்ர சக்தி- 2017’ கூட்டுப் பயிற்சி, நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது. புனேயில் உள்ள அவுண்ட் இராணுவ முகாமில் இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 25ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.
இந்தக் கூட்டுப் பயிற்சி தெற்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கிற்குப் பதிலளிக்கும் வகையிலான இந்தியாவின் முக்கியமான நகர்வாக கருதப்படுகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறந்த இராணுவ நடைமுறைகளை இரண்டு நாடுகளுக்கும் இடையில் பரிமாறிக் கொள்வதும், இரண்டு இராணுவங்களுக்கும் இடையில் பலமான இராணுவ-இராணுவ உறவுகளை கட்டியெழுப்புவதும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் நோக்கம் என்று இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள மித்ர சக்தி கூட்டுப் பயிற்சியில், கிளர்ச்சி முறியடிப்பு, தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இரண்டு வாரங்கள் நடக்கவுள்ள இந்தப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி, அடிப்படை இராணுவ தந்திரங்கள், மற்றும் தளச்சமர் மூலோபாயங்களை உள்ளடக்கியதாக இடம்பெறும்.
எதிர்வரும் 25ஆம் நாள் நடைபெறும் இறுதி ஒத்திகைப் பயிற்சியின் போது, இரண்டு நாடுகளினதும், மூத்த இராணுவ கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தெற்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், செல்வாக்கை அதிகரிக்கும் சீனாவின் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில், ‘மின்ரசக்தி’ என்ற இராணுவக் கூட்டுப் பயிற்சியை 2012ஆம் ஆண்டு இந்தியா ஆரம்பித்திருந்தது.