அணுகுண்டு சோதனை நடத்திய வடகொரியாவுக்கு சிறிலங்கா கண்டனம்
ஆறாவது அணுகுண்டுப் பரிசோதனையை கடந்த செப்ரெம்பர் 3ஆம் நாள் நடத்தியுள்ள வடகொரியாவுக்கு, சிறிலங்கா கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அணுகுண்டுச் சோதனை ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீண்டும் மீறுவதுடன், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுததலாகவும் அமைந்துள்ளது.
இந்தச் சூழலில், வடகொரியாவை மேலதிக நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறும், ஐ.நா தீர்மானங்களுடன் இணங்கிச் செயற்படுமாறும், பேச்சுக்களை ஆரம்பித்து, இந்த விவகாரத்துக்கு அமைதியான தீர்வைக் காணுமாறும், அதன் மூலம் வடகொரிய மக்களுக்கும் பிராந்தியத்துக்கும் அமைதி மற்றும் நலன்களை பாதுகாக்குமாறும் கேட்டுக் கொள்ளும் அனைத்துலக சமூகத்துடன் சிறிலங்காவும் இணைகிறது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் செப்ரெம்பர் 11ஆம் நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதுடன், ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளது என்றும் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.