நாம் எமது உரிமைகளை இழந்து விட்டோம் – அமெரிக்க பதில் உதவிச்செயலரிடம் சம்பந்தன்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான ஈபிஆர்எல்எவ் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
“நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், குறிப்பாக அரசியலமைப்பு உருவாக்க செயல்முறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து, அமெரிக்க பிரதிநிதியிடம் இரா. சம்பந்தன் எடுத்துக் கூறினார்.
மோதல்களின் பின்னணி குறித்து இரா.சம்பந்தன் எடுத்துக் கூறிய போது, “ வன்முறையினால் நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் இந்த நாட்டில் எமது உரிமைகளை இழந்து விட்டோம். இதன் விளைவாக, 1.5 மில்லியன் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
எஞ்சியுள்ள தமிழர்கள் இந்த நாட்டில் கௌரவமாக வாழ வேண்டும், நாட்டை விட்டுச் சென்றவர்கள் திரும்பி வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களினதும், கௌரவத்தை பாதுகாக்கின்ற வகையில், புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்பட வேண்டிய தேவை உள்ளது.
முந்தைய காலங்களைப் போலல்லாமல், இந்த முறை புதிய அரசியலமைப்பை வடிவமைப்பதில் அதிக பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த செயல்முறைகள் தோல்வியடைவதற்கு அனுமதிக்க முடியாது. உண்மையான அதிகாரப்பகிர்வு முக்கியமானது.” என்று கூறியுள்ளார்.