20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தென் மாகாணசபையில் தோற்கடிப்பு
அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவு தென் மாகாணசபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தென்மாகாணசபையின் ஒப்புதலுக்கான இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது. 27 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஆதரவாக ஒரு வாக்கும் அளிக்கப்படவில்லை.
வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே ஐதேக மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலரும், சபையில் இருந்து வெளியேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,
அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நேற்று மேல் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது. அவையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதன்போது, செங்கோல் உடைந்தது.
இதையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சபை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.