மீண்டும் விசாரிக்கப்படவுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலைவர்
சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண பதவியில் இருந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 3.2 மில்லியன் ரூபா தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
கடந்த 14ஆம் நாள் மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரணவிடம், 8 மணிநேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மறுநாளான 15ஆம் நாளும், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.
மீண்டும் அவர் இந்த வாரம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படவுள்ளார்.
தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம் தொடர்பாகவே அவரிடம் விசாரிக்கப்பட்டது.
அத்துடன் அது யாரிடம் இருந்து எதற்காக, எப்படி வைப்பிலிடப்பட்டது என்றும், அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்றும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.