சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் நுழையும் ஆபத்து
கடும் மழையினால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்யாததால், நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள தியவன்ன ஓயாவின் நீர் மட்டம் அதிகரிக்கவில்லை.
இன்றும் நாளையும் கடும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற அச்சத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தியவன்ன ஓயாவின் நீர்மட்டத்தை சிறிலங்கா காவல்துறை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. நாடாளுமன்ற நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறங்களில் சிறிலங்கா கடற்படையினர் மணல் மூடைகளை அடுக்கியுள்ளனர்.
அவசர நிலைமைகளைச் சமாளிக்கும் வகையில், 20 அதிகாரிகளைக் கொண்ட அனர்த்த முகாமைத்துவக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தியவன்ன ஓயாவில் வெள்ளம் ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்ததால், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் 1992ஆம் ஆண்டும், 2010ஆம் ஆண்டும் வெள்ளம் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.