சிறிலங்காவில் தேய்ந்து வரும் மகிழ்ச்சி – மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டது
சிறிலங்காவில் கடந்த சில ஆண்டுகளில் மகிழ்ச்சி குறைந்து வருவதாக நேற்று வெளியாகியுள்ள அனைத்துலக சுட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
மகிழ்ச்சி அறிக்கை-2017 என்ற அனைத்துலக சுட்டி வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதை பல்வேறு தரவுகளின் மூலம் பகுப்பாய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், 155 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் சிறிலங்கா இம்முறை 120 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இந்தப் பட்டியலில் 117 ஆவது இடத்தில் இருந்து வந்தது. எனினும் இந்த ஆண்டில் மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், நோர்வே முதலிடத்தையும், டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்சர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களையும் பிடித்துள்ளன. மத்திய ஆபிரிக்கக் குடியரசு கடைசி இடத்தில் உள்ளது.
அமெரிக்கா 14 ஆவது இடத்திலும், பிரித்தானியா 19 ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா 122 ஆவது இடத்தில் உள்ளது.