சிறிலங்கா படைகளை பலப்படுத்த சீனா நிபந்தனையற்ற ஆதரவு
சிறிலங்காவின் ஆயுதப்படைகளை மேலும் பலப்படுத்துவதற்கு, தமது நாடு நிபந்தனையற்ற, முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் உறுதியளித்துள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் நேற்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு தொடர்ந்தும், இராணுவத் தளபாடங்களையும், பயிற்சிகளையும், தொழில்நுட்ப அறிவையும் சீனா வழங்கும் என்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தார்.
அதேவேளை, சிறிலங்காவின் அபிவிருத்திக்கும், ஆயுதப்படைகளின் அபிவிருத்திக்கும் சீனா தொடர்ந்து வழங்கி வரும் உதவிக்கு சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இந்தச் சந்திப்பின் போது, நன்றியைத் தெரிவித்துள்ளார்.