தீர்மான வரைவை நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறது சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும் நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளில் சிறி்லங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும்படி இணை அனுசரணை நாடுகளிடம் சிறிலங்கா கோரியிருந்தது.
எனினும், கடுமையான நிபந்தனைகளுடன் தொடர்ச்சித் தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையிலேயே, தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும் நீர்த்துப் போகச் செய்வது தொடர்பாக இந்தியாவுடனும், ஏனைய ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள நட்பு நாடுகளுடனும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, வரும் மார்ச் 22ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதன்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்கமாட்டார். சிறிலங்கா அதிபருடன் அவர் வரும் மார்ச் 22 தொடக்கம், மார்ச் 25 வரையான காலப்பகுதியில் ரஷ்யாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.