கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க எவரையும் அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் உறுதி
தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலத்துக்கும் நீடிக்கும், யாராலும் இதனைக் கவிழ்க்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபராகப் பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த, நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அடுத்த தேர்தல் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் நடத்தப்படும். எனவே கூட்டு அரசாங்கம் நீடிக்குமா என்று யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
60 மாதங்களுக்கு நாட்டில் ஜனநாயகத்தையும், செழிப்பையும் ஏற்படுத்தும் கூட்டு அரசாங்கத்துக்கு மக்களின் ஆணை தரப்பட்டுள்ளது. இந்த ஆணையை நான் மீறப்போவதில்லை. இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.
நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆர்வமுள்ள எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.