போத்தலால் குத்தப்பட்டு சிறிலங்கா காவல்துறை அதிகாரி காயம் – கிளிநொச்சியில் பதற்றம்
கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், சிறிலங்கா காவல்துறை சார்ஜன்ட் அதிகாரி ஒருவர் முகத்தில் போத்தலால் குத்தப்பட்டு காயமடைந்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலையைக் கண்டித்து வடக்கு மாகாணத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் இடம்பெற்ற நிலையில், கிளிநொச்சி மருத்துவமனைக்கும் 155ஆம் கட்டைக்கும் இடையில் பதற்றமான நிலை காணப்பட்டது.
அதிகளவு காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை பொது மருத்துவமனைக்கு அருகே அதிகளவு மக்கள் ஒன்று கூடிய போது, அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
இதன் போதே, சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
மதுபோதையில் இருந்த ஒருவரே, காவல்துறை அதிகாரியின் மீது போத்தலால் குத்தியதாக சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சார்ஜன்ட் சமரவிக்கிரம என்ற அதிகாரி காயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கிளிநொச்சி நகரப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.