முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடமாகாணம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைகளைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்துக்கு நீதிகோரியும் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயலிழந்துள்ளது.
இன்று காலை தொடக்கம் பேருந்துப் போக்குவரத்துக்கள் எதுவுமின்றி வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. யாழ். மத்திய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் எந்த வாகனங்களையும் காண முடியவில்லை.
மருந்தகங்கள் தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பாடசாலைகளும் மாணவர்கள் வராததால், மூடப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் பெரும் பாலும் மூடப்பட்டுள்ளன.
சில அரச திணைக்களங்கள் இயங்குகின்ற போதும், ஊழியர்கள் வரவு மிகக்குறைவாக உள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தப் போராட்டத்தினால் இயல்புவாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
ஆங்காங்கே காவல்துறை வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.