புலம்பெயர் தமிழர்களுக்கு சம்பந்தன் அழைப்பு
வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடியில், புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தி நிலையத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
”வடக்கு, கிழக்கில், சில பகுதிகளில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களின் மூலம், இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள நிபுணர்கள், இந்த அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதில் சிறப்பு ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்தத் திட்டங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்கள், இந்த அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். தொழிற்சாலைகளைத் திறந்து, இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு, அரசியல் தீர்வு ஒன்று அவசியமானது.
அரசியல் தீர்வு எமக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்குத் தேவைப்படுகிறது. கடன்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு அரசியல் தீர்வு தேவைப்படுகிறது.
சில சக்திகள் இதனைக் குழப்புவதற்கு முயற்சிக்கின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.