சந்திராணியுடன் ஆளும்கட்சிக்குத் தாவினார் திஸ்ஸ அத்தநாயக்க
ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (படங்களுடன் 3ம் இணைப்பு)
ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில், வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர், வெளியே வந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுச்செயலர் வெளியே சென்றதற்காக, ஐதேகவின் பொதுச்செயலரை உள்ளே கொண்டு வந்துள்ளதாகவும், ஐதேக உறுப்பினர்களை கொண்டு வருவது ஒன்றும் பெரிய வேலையல்ல என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் கதவுகள் திறந்திருப்பதாகவும், விரும்பியவர்கள் உள்ளே வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இன்று காலை சிறிகோத்தாவுக்குச் சென்ற திஸ்ஸ அத்தநாயக்க, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுடன், ஐதேகவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டாரவும், ஆளும்கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு, சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திஸ்ஸ அத்தநாயக்க சற்றுமுன்னர் அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் அமைச்சர்களையும் சந்தித்தார்.
அவருக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜயந்த கோத்தாகொடவும் மகிந்த பக்கம் பாய்ந்தார்
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கோத்தாகொட, ஆளும்கட்சியின் பக்கம் தாவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக ஜயந்த கோத்தாகொட அறிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுடன் ஜயந்த கோத்தாகொடவும் அலரி மாளிகைக்குச் சென்று மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார.
சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகிய போது, அந்த இடத்துக்கு ஜயந்த கோத்தாகொட நியமிக்கப்பட்டிருந்தார்.
ஏற்கனவே இவர் ஆளும்கட்சிபக்கம் தாவுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.