இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டை செய்யுமாறு சிறிலங்காவுக்கு மூன்று நாடுகள் அழுத்தம்
இந்தியாவுடன், சிறிலங்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்வதையிட்டு ஜப்பான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகள், அக்கறை கொண்டுள்ளதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இந்தியச் சந்தைக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான இடமாக சிறிலங்காவைப் பயன்படுத்த முன்னேறிய கைத்தொழில் நாடுகள் விரும்புகின்றன.
இந்தியாவுக்கான நுழைவாயிலாக சிறிலங்காவை ஜப்பான் பயன்படுத்தவுள்ளது. எட்கா எடன்பாடு செய்து கொள்ளப்பட்டால், சிறிலங்காவுக்கான முன்னுரிமையைப் பயன்படுத்தி, ஜப்பான் தனது பொருட்களை இந்தியச் சந்தைக்கு அனுப்ப முடியும்.
தாம் சிறிலங்காவில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, எப்போது இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டை செய்யவுள்ளீர்கள் என்று ஜப்பான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் கேள்வி எழுப்புகின்றன.
வர்த்தகப் பாதையின் நடுவில் சிறிலங்கா இருப்பதால், முக்கியமான கவனிப்பைப் பெற்றுள்ளது. இது கப்பல்களின் போக்குவரத்து அதிகரிப்பதற்கு முக்கியமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.