வடக்கிலுள்ள மக்களுக்கு உதவுவதாக மைத்திரியிடம் ஜேர்மனி அதிபர் உறுதி
சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, திருப்தி வெளியிட்டுள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், வடக்கிலுள்ள மக்களின் நலன்களுக்காக ஜேர்மனி அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல்லுக்கும் இடையில் பெர்லினில் நேற்று நடந்த சந்திப்பின் போதே, இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு விவகாரங்கள், பலதரப்பு விவகாரங்கள் குறித்து இருநாடுகளின் அதிபர்களும் கலந்துரையாடினர்.
இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாடுகளை அதிகரிப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
சிறிலங்காவில் தொழிற்பயிற்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி என்பனவற்றுக்கு நிதியுதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜேர்மனி அதிபர் உறுதியளித்தார்.
சிறிலங்காவில் இருந்து மீன் ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை குறித்து கருத்து வெளியிட்ட ஜேர்மனி அதிபர், இதுகுறித்து விசாரணை ஒன்று இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி சலுகை கிடைப்பதற்கு ஜேர்மனி உதவ வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் வேண்டுகோள் விடுத்தார். அதனையும் தாம் கவனத்தில் கொள்வதாக ஜேர்மனி அதிபர் உறுதியளித்தார்.
இதையடுத்து, ஜேர்மனி அதிபரை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்தார் . இந்த அழைப்பை ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் ஏற்றுக்கொண்டுள்ளார்.