மேலும்

சரணடைந்தோரின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு 58ஆவது டிவிசனுக்கு நீதிமன்றம் உத்தரவு

gavelவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது, தம்மிடம் சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரிக்கு  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சிறிலங்கா அரசாங்கம் அளித்த பாதுகாப்பு மற்றும் பொதுமன்னிப்பு உத்தரவாதத்தை அடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர், போரின் இறுதிக்கட்டத்தில், 58 ஆவது டிவிசனைச் சேர்ந்த சிறிலங்கா படை அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்த பலர்,  எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரையில் சிறிலங்கா இராணுவத்தினராலோ, அரசாங்கத்தினாலோ வெளியிடப்படவில்லை.

சரணடைந்து காணாமற்போயுள்ள, விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும், சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட சிலரின்,குடும்பத்தினர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் உட்பட்டது என்பதால், அதுபற்றிய விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளில், சிறிலங்கா இராணுவத்தின் தரப்பில்  58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான  மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன சாட்சியமளித்தார்.

அப்போது, நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எவரும் 58 ஆவது டிவிசனிடம் சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை என்று மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், அந்த இராணுவ அதிகாரியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் சரணடையவில்லை என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என வினவினார்.

அதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன, இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த அனைவரதும் பெயர், விபரங்கள் அடங்கிய பட்டியல்கள் தமது முகாமில் இருப்பதாகவும், அவற்றை பரிசீலனை செய்தபோது இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அங்கு சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தங்களிடம் உள்ள ஆவணங்களில் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சரணடைந்தவர்களின் பெயர், விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் ஆவணம், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாக இருப்பதை நீதிமன்றத்திற்குச் சுட்டிக்காட்டி, அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதியிடம் சட்டத்தரணி ரட்ணவேல் கேட்டுக்கொண்டார்.

அந்த வேண்டுகோளுக்கு அரச தரப்பு சட்டத்தரணி பலத்த எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆயினும் அந்த எதிர்ப்பை நிராகரித்து, சம்பந்தப்பட்ட ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *