சுமந்திரனின் சட்டமூலத்தை மாகாணசபைகளின் ஒப்புதலுக்கு அனுப்புகிறார் சபாநாயகர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட, அடிமடி வலைகளைப் பயன்படுத்தி இழுவைப் படகு மூலம் மீன்பிடித்தலைத் தடைசெய்யும், சட்டமூலத்தை, மாகாணசபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுதந்திரன் சமர்ப்பித்திருந்தார்.
ஒன்பது மாகாணசபைகளினதும் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக, இந்தச் சட்டமூலத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
இதுகுறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
“சிறிலங்கா அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின்படி, மீன்பிடி, மத்திய அரசின் விடயங்களுக்குள் வருகிறது.
எனவே இந்தச் சட்டமூலத்துக்கு ஒவ்வொரு மாகாணசபையினதும் ஒப்புதலைப் பெற வேண்டிய தேவையில்லை. மாகாணசபைகளுக்கு இந்த சட்டமூலத்தை அனுப்புவது ஒரு பிரதான தடையாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
அடி மடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தலை சிறிலங்கா தடை செய்யாத நிலையில், தமிழ்நாடு மீனவர்கள், அத்துமீறி, அத்தகைய மீன்பிடித்தலில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.