சிறைக்குள் யோசிதவிடம் கைத்தொலைபேசி – விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ச, சிறைக்கூண்டில் கைத்தொலைபேசி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச, சிறைச்சாலைக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தும் படி, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சிறைச்சாலைக்குள் எந்தக் கைதியும் கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், சிறைக் கூண்டியில் உள்ள யோசித ராஜபக்சவிடம் கைத்தொலைபேசி இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து விட்டுத் திரும்பிய போது, யோசித ராஜபக்சவின் சட்டைப் பையில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று தவறி கீழே விழுந்ததாகவும், அதுகுறித்து சிறைச்சாலை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.