முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்படவில்லை – இரா.சம்பந்தன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு எவரேனும் கூறி யிருந்தால் அது தவறானது, எனத் தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்குமாறு தான், கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இரா. சம்பந்தன், “கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், முதலமைச்சர் வெளியிட்ட சில கூற்றுக்கள் மற்றும் அவரின் சில நட வடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மை.
அது தொடர்பாக அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. பேச இருக்கிறோம்.
எனினும், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக யாரும் கூறியிருந்தால் அது தவறு.
முதலமைச்சருக்கும் எமக்குமிடையில் விரைவில் பேச்சு இடம்பெறும்.” என்று தெரிவித்துள்ளார்.