யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்து வைக்கும் புதிய சிறைச்சாலை
ஆயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். நகரில் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலை வளாகத்தை, சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன இன்று திறந்து வைத்துள்ளார்.
புதிய சிறைச்சாலை வளாகம், நவீன தொழில் நுட்ப வசதிகள் மற்றும் மருத்துவமனை, மற்றும் கைதிகளுக்குப் போதிய இடவசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
2.5 ஏக்கர் நிலத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய சிறைச்சாலை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
போரின் போது, யாழ்ப்பாணத்தில் இருந்த சிறைச்சாலை அழிக்கப்பட்டதையடுத்து, தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களிலேயே சிறைச்சாலை தற்காலிகமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.