திருகோணமலையில் கடற்படையின் இரகசிய வதை முகாம் – விரிவான அறிக்கை சிஐடி தாக்கல்
திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில் நிலத்துக்கு அடியில் உள்ள கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொல்கஹவெல நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையின் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலால் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கடத்தப்பட்டு கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட தனி வழக்கிலேயே, பொல்கஹவெல நீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கன்சைட் முகாம் வளாகத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய விரிவான கண்டுபிடிப்புகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதுடன், காவலில் இருந்தபோது அவர்கள் அனுபவித்ததாகக் கூறப்படும் சித்திரவதைகளை விவரிக்கும், கைதிகளாக இருந்தவர்களின் வாக்குமூலங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட குறித்த நபர் கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
