நிமலராஜன் படுகொலை விசாரணை தொடர்பான அறிக்கை வெளியீடு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் செல்வக்குமார் குறித்த அறிக்கையின் முதல் பிரதியை, ஊடகவியலாளர் நிமலராஜனின் சிறிய தந்தையும், மூத்த ஊடகப் பணியாளருமான லோகநாதனிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம்,மற்றும் ஊடகவியலாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.