மேலும்

பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதில் இணைந்திருக்கிறது கனடா – மார்க் கார்னி

இனப்படுகொலை அட்டூழியங்களில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூருவதில், தமிழ்-கனடியர்களுடன் கனடா இணைந்திருப்பதாக கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில், 42 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்களுக்கு எதிரான ஒரு படுகொலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. எண்ணற்றோர் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சிறிலங்கா வரலாற்றில் கறுப்பு ஜூலை ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது.

தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்ட கனடா, 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய  ஆயிரத்து 800 க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க, ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயற்படுத்தியது.

உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்புடன், 2022 ஆம் ஆண்டு, கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை, தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக ஒருமனதாக அறிவித்தது.

இந்த அட்டூழியங்களில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூருவதில் தமிழ்-கனடியர்களுடன் கனடா நிற்கிறது.

இந்த புனிதமான நாளில், இழந்த உயிர்களை நாங்கள் மதிக்கிறோம்.

அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகத்தை உருவாக்குவதற்கான, எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம் என்றும் அந்த அறிக்கையில் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *