மேலும்

சீன- சிறிலங்கா கடல்சார் ஒத்துழைப்பில் 3ஆம் தரப்பு தலையிடக்கூடாது – வாங் யி

சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா வலியுறுத்தியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்றுமுன்தினம் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை மலேசியாவில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போதே, சீன – சிறிலங்கா இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, அவர் சிறிலங்கா வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் தங்கள் மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்தவும் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உறுதியளித்துள்ளனர்.

சிறிது காலமாக கலந்துரையாடப்பட்டு வரும் சீன-சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாடு, இருவழி வர்த்தகத்தை அதிகரிக்கும் மற்றும் வர்த்தக புள்ளிவிவரங்களில் உள்ள ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதை மற்றும் அணை முன்முயற்சி (BRI) ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய இரண்டு முதன்மை திட்டங்களை கூட்டாக செயற்படுத்தவும், பசுமை எரிசக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், நவீன விவசாயம் மற்றும் கடல்சார் (நீல) பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வளர்ச்சி புள்ளிகளை உருவாக்கவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அழைப்பு விடுத்துள்ளார்.

கடல்சார் ஒத்துழைப்பு விடயத்தில், எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை என்றும், எந்த மூன்றாம் தரப்பினரும் அதில் தலையிடக்கூடாது என்றும் சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில தரப்புகளால் பின்பற்றப்படும் இந்தோ-பசுபிக் மூலோபாயம், மோதலைத் தூண்டி, அனைத்து தரப்பினரையும் ஒரு பக்கமாக எடுக்க கட்டாயப்படுத்துகிறது என்றும், இது காலத்தின் தேவைக்கு ஏற்றதல்ல என்றும், பிராந்திய நாடுகளால் ஆதரிக்கப்படாது என்றும் சீன வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *