இந்திய உடன்பாடுகளை வெளிப்படுத்த புதிய தடை
இந்தியாவுடனான உடன்பாடுகள் தொடர்பான விவகாரம், நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அந்த உடன்பாடுகளை தற்போது, வெளியிட முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா நேற்று நாடாளுமன்றத்தில், ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி, இந்தியாவுடன் அண்மையில் அரசாங்கம் கையெழுத்திட்ட உடன்பாடுகள் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
“இந்தியாவுடன் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்ட உடன்பாடுகள் குறித்து நான் ஏற்கனவே பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அந்த உடன்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து, அவை குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்துவதாக பிரதமர் கடந்த மாதம் கூறியிருந்தார்.
ஆனால் இன்றுவரை அந்த உடன்பாடுகள் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.
உடன்பாடுகள் இன்னும் ஆராயப்படுகிறதா அல்லது அவற்றை வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்றும் அஜித் பெரேரா பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய,
“இந்திய உடன்பாடுகள் தற்போது நீதித்துறை மதிப்பாய்வில் உள்ளன, எனவே இந்த நேரத்தில் உடன்பாடுகள் குறித்து எதையும் வெளியிட முடியாது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மாறாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது
இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா ஏன் வருத்தப்படுகிறார் என்று தெரியவில்லை.
நீதித்துறை மறுஆய்வு காரணமாக உண்மைகளை வெளியிட முடியவில்லை.
இந்தஉடன்பாடுகள் தொடர்பான விடயத்தில் எனக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.