மேலும்

நாளை ஜெர்மனிக்குப் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நாளை ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜெர்மன் அதிபர் பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் ( Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

எதிர்வரும், 13ஆம் திகதி வரை அவர் ஜெர்மனியில் தங்கியிருப்பார் என அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஜெர்மன் அதிபர், ஜெர்மன் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் குறித்து இதன் போது கலந்துரையாடுவார்.

இந்தப் பயணத்தின் போது, ஜெர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களையும் சிறிலங்கா அதிபர் சந்திக்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர், விஜித ஹேரத் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளும், பெர்லினுக்குப் பயணமாகவுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *