மேலும்

ஒக்ரோபர் 9, 10 இல் கோத்தா, சஜித்தின் பரப்புரைப் பேரணிகள் ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மோதவுள்ள  சஜித் பிரேமதாசவும், கோத்தாபய ராஜபக்சவும், அடுத்த மாதம் கொழும்பு காலிமுகத்திடலிலும், அனுராதபுரவிலும் தமது பரப்புரைப் பேரணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஐதேக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச, கூட்டணியைப் பலப்படுத்தி, தமக்கான ஆதரவை உறுதிப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் உங்வாங்குவதில் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

ஏற்கனவே ஐதேகவில் இருந்து விலகியிருந்த முன்னாள் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன ஆகியோர் மீண்டும் ஐதேகவுக்கு திரும்பி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வரும் 7ஆம் நாள் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ஒக்ரோபர் 10ஆம் நாள் சஜித் பிரேமதாச பரப்புரையை ஆரம்பிக்கவுள்ளார்.

அன்று பிற்பகல் 1.30 மணியளவில் காலிமுகத்திடலில் பாரிய பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பரப்புரைப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தீவிர பரப்புரைப் பேரணிகளை நடத்தவுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் பரப்புரை அனுராதபுரவில் வரும் ஒக்ரோபர் 9ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனுராதபுர சிறிமாபோதியிலும் ருவன்வலிசாயவிலும்  காலையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் கோத்தாபய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும், அனுராதபுர சல்ஹாடோ மைதானத்தில் நடக்கும் பாரிய பேரணியில் பங்கேற்கவுள்ளனர்.

இதையடுத்து இரண்டு பிரதான வேட்பாளர்களும் மாவட்ட மற்றும் தொகுதி ரீதியான பரப்புரைப் பேரணிகளில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *