திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1 பில்லியன் யென் கொடை வழங்குகிறது ஜப்பான்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, ஜப்பான் 1 பில்லியன் யென், நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
ஜப்பானிய தூதுவர் ஷின்சோ அபேசியின் சிறப்பு பிரதிநிதியாக, சிறிலங்கா வந்துள்ள, ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர், கலாநிதி ஹிரோரோ இசுமி, நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் நடத்திய பேச்சுக்களின் போதே, இந்த நிதியுதவி பற்றி அறிவித்தார்.
சிறிலங்காவை நல்லதொரு நண்பனாக பார்க்கும் ஜப்பான், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் உறுதி பூண்டிருப்பதாக, கலாநிதி ஹிரோரோ இசுமி, இந்தச் சந்திப்பின் போது கூறினார்.
திருகோணமலை துறைமுகத்தை முன்னேற்றுவதற்கு 1 பில்லியன் யென், கொடையை ஜப்பான் வழங்கும் என்றும், ஜப்பானின் கியோடோ நகரைப் போன்று கண்டி நகரத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் உதவும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, கொழும்பு இலகு தொடருந்து திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம், கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.