மேலும்

தீவிரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலருடன் பேசவுள்ள சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவுக்கு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன், தீவிரவாத முறியடிப்பு, இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமெரிக்க இராஜாங்கச் செயலர் தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, அவர் சிறிலங்காவுக்கு வருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஆலோசகர் சுதர்சன குணவர்த்தன வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவு ஒன்றில்,

“அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன், தீவிரவாத முறியடிப்பு, இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, சுதந்திரமான வெளிப்படையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கான, பகிரப்பட்ட கடப்பாடுகளின் அடிப்படையில், அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் கலந்துரையாடவுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, அமெரிக்க உதவிகள் குறித்தும், இந்தோ- பசுபிக் மூலோபாயம் குறித்தும் கலந்துரையாடுவார் என, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *