மேலும்

கட்டுநாயக்கவில் இந்தியப் பிரதமரை வரவேற்கப் போவது யார்? – குழப்பும் தகவல்கள்

மூன்று மணிநேர குறும்பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா வரவுள்ள இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப் போவது யார் என்பது தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருதரப்பு பயணமாக இன்று முற்பகல் 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வந்தடையவுள்ளார்.

அவரை அமைச்சரவையின் சார்பில் வரவேற்பதற்கான பொறுப்பை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் சிறிலங்கா அதிபர் வழங்கியிருந்தார்.

பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இந்தியப் பிரதமரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பார் என்றும், அதிபர் செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரவேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க – மரபுக்கு மாறாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்டுநாயக்க விமான நிலையம் செல்லவுள்ளார் என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரதமரை சிறிலங்கா அதிபர் வரவேற்று அவருடன் பேச்சு நடத்துவார் என்றும், அதனையடுத்து, இருவரும் மோட்டார் வாகன பவனியாக கொழும்பு வரவுள்ளனர் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமரின் பயணம் தொடர்பான தெளிவான நிகழ்ச்சி நிரல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு குழப்பமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *