மேலும் 5 அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு
சிறிலங்கா அரசியலில் முதல் முறையாக – இரண்டு வாரங்களில் 11ஆவது தடவையாக இன்று மாலையும் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த 26ஆம் நாள், சிறிலங்காவின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், கட்டம் கட்டமாக அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை 10 ஆவது தடவையாக, விமல் வீரவன்ச அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்று மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், 5 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
உதய கம்மன்பில – பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர்
எஸ்.எம்.சந்திரசேன – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னான்டோ – வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர்
சி.பி.ரத்நாயக்க – அஞ்சல், தொலைத் தொடர்பு அமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சர்
ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன்
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும் கூட, ரணில் விக்கிரமசிங்கவை தான் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, நடுநிலை வகிக்குமாறு கூட்டமைப்பிடம் சிறிலங்கா அதிபர் கோரியிருந்தார்.
எனினும், அதற்கு கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்திருந்தது. இதன் போதே, தாம் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விமல் வீரவன்சவுக்கு வீடமைப்பு அமைச்சு
சிறிலங்காவின் வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், விமல் வீரவன்ச, வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
சிறிலங்காவில், கடந்த மாதம் 26ஆம் நாள், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், 10 ஆவது சுற்று அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தா மீதான வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்படுகிறது
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றினால் ஒரு மாதத்துக்குத் தளர்த்தப்பட்டுள்ளது.
வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைக்கப்பட்டதில், 49 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
இதன்போதே, கோத்தாபய ராஜபக்சவின் கோரிக்கையை ஏற்று, டிசெம்பர் 14ஆம் நாள் தொடக்கம், ஒரு மாதகாலத்துக்கு, அவர் மீதான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.