மேலும்

குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம்

புகலிடம் தேடிய, கணவனை சிறிலங்காவுக்கு நாடு கடத்தி இலங்கை தமிழ் குடும்பத்தைப் பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிய 18 இலங்கையர்கள் நேற்று கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான திலீபன், தனது மனைவி மற்றும் 11 மாத  குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு,  சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிட்னியில் வசித்த இவரை, நாடு கடத்தியதன் மூலம்,  அவுஸ்ரேலியாவில் புகலிடம் வழங்கப்பட்ட அவரது மனைவி, 11 மாத குழந்தையுடன் தனித்து விடப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை குடும்ப ஒற்றுமை என்ற அடிப்படை உரிமைக்கு முரணானது, குழந்தையின் நலன் குறித்த அடிப்படை கொள்கைகளுக்கும் எதிரானது.

தந்தை நாடு கடத்தப்படமாட்டார், குடும்பத்துடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தை அவுஸ்ரேலியாவிடமிருந்து கோரியிருந்தோம்.

அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு, தனியார் சட்டத்துறையினர் பலர் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

கடல்வழியாக அவுஸ்ரேலியாவை சென்றடைபவர்கள், தங்கள் குடும்பத்தவர்களுடன் சேரவிடாமல் தடுக்கப்படுகின்றனர்.

நவ்ரு தீவில் இவ்வாறு பல பெற்றோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணிகளான மனைவிமார்கள் பிரசவத்திற்காக அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பபட்டுள்ளனர்.

நவ்ரு அல்லது பபுவா நியுகினி அகதிகள் குடியேற்றத்திற்கான பொருத்தமான இடமில்லை என்ற போதிலும் குடும்பங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இணையவிடவில்லை.

சில வேளைகளில் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அவுஸ்ரேலியா செல்லும் வேளை குழந்தைகள் நவ்ருவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது குழந்தைகளின் உளநலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இலங்கை அகதிகள் விவகாரம் வெறுமனே குடும்பங்களை ஒன்று சேரவிடாமல் தடுப்பதற்கு அப்பாற்பட்டது” என்றும் அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *