மேலும்

திரிசங்கு நிலையில் 16 பேர் அணி – கூட்டு எதிரணியும் விரட்டுகிறது

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியை தம்முடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும, சிசிர ஜெயக்கொடி, பந்துல குணவர்த்தன ஆகியோர், இதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

”16 பேர் அணி, கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி விட்டது. ஆனால், அவர்கள் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் கூட்டு அரசாங்கத்தில் தான் அங்கம் வகிக்கிறது.

16 பேர் அணியில் உள்ள பலர் அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் பதவிகளையும் பெற்றுள்ளனர்.

ஐதேகவுடன் இணைந்து அரசாங்கத்தில் பணியாற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளை வைத்துக் கொண்டு,அவர்கள் எம்முடன் இணைய முடியாது.

அவர்கள் வேண்டுமானால் நாடாளுமன்றத்துக்குள்ளே அல்லது வெளியே எம்முடன் இணைந்து செயற்படலாம்.

ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு, கூட்டு எதிரணியின் பதவிகளைப் பெற முடியாது.” என்று  தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, 16 பேர் அணியில் உள்ள பலரும், கூட்டு எதிரணியில் இணைந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தாலும், அதற்கு கூட்டு எதிரணிக்குள் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் ஒட்டிக் கொள்ள முடியாமல், கூட்டு எதிரணியுடனும் சேர முடியாமல், திரிசங்கு நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *