கூட்டு அரசு உடன்பாடு முறிந்து போனது?
பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தமது தரப்பில் ஆனந்த குமாரசிறியை போட்டியில் நிறுத்தியதன் மூலம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான புரிந்துணர்வு உடன்பாட்டை மீறி விட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிரதி சபாநாயகர் பதவி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
நேற்று நடந்த பிரதி சபாநாயகர் தெரிவின் போது, ஆனந்த குமாரசிறியை ஐதேக நிறுத்தியது. அவர் 44 வாக்குகள் வித்தியாசத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னிறுத்திய வேட்பாளர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி, கூட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இரண்டு கட்சிகளும் செய்து கொண்ட உடன்பாடு முறிந்து விட்டது என்று கூறியுள்ளார்.
அதேவேளை, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் பதவிகளை ஐக்கிய தேசிய கட்சியே வைத்திருப்பது, கூட்டு அரசாங்க கொள்கைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்று உடன்பாடு செய்து விட்டு இப்போது ஐதேக அதனைக் கைப்பற்றியுள்ளது. இப்போதாவ இதனை தேசிய அரசாங்கம் என்று சொல்லிக் கொள்வதை நிறுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.