7 மாகாண ஆளுனர்கள் மாற்றம் – வடக்கில் வெற்றிடம்
வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே ஆளுனர்களாக இருந்தவர்களே உள்ளக இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, வட மாகாண ஆளுனராக இருந்த ரெஜினோல்ட் குரே மத்திய மாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ளார். வடமேல் மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் பதவியேற்றுள்ளார்.
மேல் மாகாண ஆளுனராக ஹேமகுமார நாணயக்காரவும், சப்ரகமுவ மாகாண ஆளுனராக நிலுக்க எக்கநாயக்கவும்,தென் மாகாண ஆளுனராக எம். பெரேராவும், வட மத்திய மாகாண ஆளுனராக எம்.பி.ஜெயசிங்கவும், ஊவா மாகாண ஆளுனராக பி.பி.திசநாயக்கவும் பதவியேற்றுள்ளனர்.
வட மாகாண ஆளுனராக இருந்த ரெஜினோல்ட் குரே மத்திய மாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ள போதிலும், வடக்கு மாகாண ஆளுனராக எவரும் நியமிக்கப்படவில்லை.
முன்னதாக, வடக்கு மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.