இரண்டாவது போர்க்கப்பலையும் சிறிலங்காவிடம் கையளித்தது இந்தியா
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட 2500 தொன் எடையுள்ள பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
முதலாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கடந்த ஆண்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டு, கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பலைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கோவா கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்றது.
இதில், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வராவிடம், புதிதாக கட்டப்பட்ட கப்பல் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ரொசாரியோ, மற்றும் இந்திய, சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.