மேலும்

உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு வரதரின் அணி ஆதரவு

A.Varatharajaperumalஉள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கப் போவதாக, வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் அறுதிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், வரும் 20ஆம் நாள், புதிய உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் முதல் கூட்டத்தில், சபைகளின் தலைவர்கள் தெரிவு இடம்பெறும். பெரும்பான்மை பலம் யாருக்கும் கிடைக்காத நிலையில் தலைவர்கள் தெரிவின் போது குழப்பநிலை ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள்,

“தமிழர் சமூக ஜனநாயக கட்சி சுயேட்சையாக 6 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு, சாவகச்சேரி நகர சபை, சாவகச்சேரி பிரதேச சபை, திருகோணமலை நகர சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றில் தலா ஒரு உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.

அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகள், ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்த முன்வரவில்லை. இந்த நிலையில் சபைகளின் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எந்தக் கட்சியுடனும் இணைந்து செயற்பட தமிழர் சமூக ஜனநாயக கட்சி தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *