சிறிலங்கா அதிபரின் பிரதிநிதியும் ஜெனிவா செல்கிறார்
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளையும், எதிர்வரும் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
நாளைய அமர்வில், சிறிலங்கா தொடர்பான பூகோள காலமீளாய்வு அறிக்கை பற்றிய விவாதம் இடம்பெறவுள்ளது.
அதேவேளை, வரும் 21ஆம் நாள், ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, மீண்டும் 2017 ஆம் ஆண்டு மீளவும் காலநீடிப்புச் செய்யப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றிய விவாதம் இடம்பெறவுள்ளது.
இதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இடைக்கால அறிக்கையும் சிறிலங்கா அரசாங்கத்தின் பதில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.
இந்த அமர்வில் பங்கேற்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு நாளை மறுநாள் ஜெனிவா செல்லவுள்ளது.
இந்தக் குழுவில், சிறிலங்கா அதிபரின் பிரதிநிதியாக சிறப்பு திட்டங்கள் அமைச்சரான, கலாநிதி சரத் அமுனுகம ஜெனிவா செல்லவுள்ளார்.