காளான்கள் போல முளைக்கும் சீன வாணிப நிலையங்கள் – சிறிலங்கா அதிபர் அதிருப்தி
சிறிலங்கா முழுவதும் காளான்களைப் போல முளைத்துக் கொண்டிருக்கும், சீன வாணிப நிலையங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இதுகுறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு, கண்டியில் சீன வாணிப நிலையங்கள் அதிகரித்துள்ளது குறித்தும், சீன வாணிப நிலையங்களின் உரிமையாளர்கள் சுகததாச அரங்கில் நாளை நடத்தவுள்ள ஒன்று கூடல் தொடர்பாகவும், அதிருப்தி வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபர், இது உள்ளூர் வாணிப நிலையங்களின் உரிமையாளர்களுக்குப் பாதகமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் நிதியமைச்சர் எடுத்த நடவடிக்கைகள், காரணமாக நாட்டின் சிறிய வாணிப நிலையங்களின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டில் இருந்தே சீன வாணிப நிலையங்களின் திறப்பு ஆரம்பமாகி விட்டது என்று நினைவுபடுத்தியுள்ளார்.