இந்தியாவின் கொல்லைப்புற ஆதிக்கம் சிறிலங்காவில் நீண்டகாலம் நீடிக்காது – சியாம் சரண்
அண்டை நாடுகளுக்குள் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து இந்தியா கரிசனை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.
ஜெய்பூர் இலக்கிய விழாவில், நேற்று அவர் இந்தியா மற்றும் உலகம் என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இராணுவ மற்றும் பொருளாதார வழிகளின் மாத்திரமன்றி, விஞ்ஞான தொழில்நுட்பத் துறைகளிலும் கூட, சீனா மிகப்பெரும் சக்தியாக எழுந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நேபாளத்தில் சீனாவின் தலையீடுகள் பெரியளவில் உள்ளன. உள்நாட்டு அரசியலிலும் சீனாவின் தலையீடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
அதுபோலவே, சிறிலங்காவில் அம்பாந்தோட்டையிலும் நடக்கிறது. நாங்கள் விரும்பாவிட்டாலும், பல ஆண்டுகளாக அது உண்மையாகி வருகிறது.
சிறிலங்காவிலும், நேபாளத்திலும் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வரும் விடயத்தில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகம் மாறி விட்டது. இது எனது கொல்லைப்புறம், இங்கு நான் மட்டும் தான் ஆட்சி செய்வேன் என்று நீண்டகாலத்துக்கு கூறிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.
அதனால் நீங்கள் சீனாவுடன் போட்டியிட வேண்டும்.
உங்கள் அண்டைநாடுகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், ஏன் உங்களின் தலையீடுகளை அதிகரிக்க முடியாது? இந்தியாவுக்கு அதற்கான ஆற்றல்கள் உள்ளன.
சீனாவைப் பிடிப்பதற்கு மாத்திரமன்றி அதனை முந்துவதற்கும் கூட, இந்தியாவினால் மட்டும் தான் முடியும். அதற்கான சனத்தொகை, பரப்பளவு, ஆற்றல்கள் இந்தியாவிடம் உள்ளது. சீனாவை முந்துவதற்கு உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்று நான் நம்புகிறேன்.
அடுத்த இரண்டு பத்தாண்டுகளில் சீனா உலகின் இரண்டாவது பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் என்று எவராவது கூறியிருந்தால் அவரை பைத்தியம் என்று கூறியிருப்பர்.
எனவே, வாய்ப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். அதற்கான முடிவுகளை இன்றே எடுக்க வேண்டும்
சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ள, அமெரிக்கா, ஜப்பான், வியட்னாம் போன்ற நாடுகளுடன் இந்தியா இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.