சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஜாவிட் பஜ்வா நேற்று சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பாரம்பரிய முறைப்படி, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுடன், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வா பேச்சுக்களை நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களில் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகளும், சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் தொடர்பாக இந்தப் பேச்சுக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்டது.
அதேவேளை, பாகிஸ்தான் இராணுவத் தளபதி, நேற்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவையும், விமானப்படைத் தலைமையகத்தில், சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.