சிறிலங்காவின் தகவல் தொழில்நுட்பத் துறை அபிவிருத்திக்கு இந்தியா உதவும்
தகவல் தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்வது மற்றும் புதிய போக்குகளை அடையாளம் காண்பதற்கு சிறிலங்காவுக்கு இந்தியா உதவும் என்று இந்திய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் சட்டம் மற்றும் நீதி, இலத்திரனியர் மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே, தகவல் தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்காவுக்கு இந்தியா உதவும் என்று இந்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதிஅளித்தார்.
அத்துடன், இந்தச் சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்க, இணையப் பாதுகாப்பு தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கத்துடன் சிறிலங்கா பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் உதவியையும் கோருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், அமைச்சர்கள் பலரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.