இன்று மதியம் வரை காலஅவகாசம் – விரைவில் மைத்திரிக்கு உச்சநீதிமன்றத்தின் முடிவு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பான தமது முடிவை உச்சநீதிமன்றம், சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
தமது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று அறிவிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இதற்கமைய, நேற்று தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் அமர்வு திறந்த விவாதம் ஒன்றை நடத்தியது.
இதன்போது, சட்டமா அதிபர் மற்றும் ஏனைய சட்ட நிபுணர்களும் தமது வாதங்களை முன்வைத்தனர்.
இதையடுத்து, நேற்று வாதங்களை முன்வைத்த தரப்பினர் எழுத்துமூலம் அவற்றை முன்வைப்பதற்கு இன்று மதியம் 12 மணி வரை உச்சநீதிமன்ற அமர்வு காலஅவகாசம் வழங்கியுள்ளது.
இதன் பின்னர், உச்சநீதிமன்றம் அவற்றை பரிசீலனை செய்து. தமது முடிவை சிறிலங்கா அதிபருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கும்.
எதிர்வரும் 14ஆம் நாளுக்குள் உச்சநீதிமன்றத்தின் முடிவு அனுப்பிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.