மேலும்

மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள் அதிபர் பதவியில் இருக்கலாம் – சட்டமா அதிபர்

maithripala-srisenaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2015 ஜனவரி 9ஆம் நாள் தொடக்கம், ஆறு ஆண்டுகளுக்கு அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், 2020ஆம் அண்டுடன் நிறைவடைகிறதா அல்லது 2021ஆம் ஆண்டு வரை அவர் பதவியில் தொடர முடியுமா என்பது குறித்து விவாதிக்க சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை இடம்பெற்றது,

இதில் சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவினால் முன்வைக்கப்படட வாதத்திலேயே, 2015 ஜனவரி 9ஆம் நாள் தொடக்கம், மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகளுக்கு அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

”மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிபர் தேர்தலில் ஆறு ஆண்டுகள் பதவி வகிப்பதற்கான ஆணையே வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசியல்சட்டத்தினால் இதில் மாற்றங்களைச் செய்ய முடியாது.  அவ்வாறு மாற்றம் செய்வதற்கு புதிய மக்கள் ஆணையும், நாடாளுமன்ற அங்கீகாரமும் பெறப்பட வேண்டும்.

அதிபரின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக வரையறை செய்யும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னரே, 2015 மே மாதம் தான் நடைமுறைக்கு வந்தது.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலத்தை, அதிபரே கூட மாற்ற முடியாது. வேண்டுமானால் அவர் பதவியை விட்டு விலகலாம்.  ஆனால், அவருக்குப் பதிலாக  அந்தப் பதவியைப் பொறுப்பேற்பவர், ஆறு ஆண்டு பதவிக்காலத்தின் எஞ்சிய காலப்பகுதியை நிறைவு செய்ய வேண்டும்.

கடந்த நாடாளுமன்றம் ஆறு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்திருந்தது. 19 ஆவது திருத்தச்சட்டத்தினால் அதன் பதவிக்காலத்தில் குழப்பம் ஏற்படவில்லை. அந்த நடைமுறை அதிபரின் பதவிக்காலத்துக்கும் பொருந்தும்.

அடுத்த அதிபருக்கே ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பதற்கான ஆணையை மக்களால் வழங்க முடியும்.” என்றும் சட்டமா அதிபர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *