மேலும்

பரபரப்பான சூழலில் இன்று அவசரமாகக் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

parliamentபரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்றம் இன்று காலை கூடும் என்று நேற்று முன்தினம் சபாநாயகர் அறி்வித்திருந்தார்.

இதற்கமைய இன்று காலை சபையின் சிறப்பு அமர்வு கூடவுள்ளது. இந்த அமர்வில், பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை, உறுப்பினர்களுக்கு கையளிக்கப்படும்.

எனினும், இன்று இதுபற்றிய விவாதம் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சபாநாயகர் கூட்டிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அதுபற்றி விவாதம் நடத்த முடியாது என்பதால், பிறிதொரு நாளில் விவாதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆணைக்குழுவின் அறிக்கை ஆங்கிலத்திலேயே இருப்பதாகவும், அதனை தமிழ், சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்புச் செயவதற்கு பல மாதங்கள் ஆகும் என்பதால், ஆங்கில மொழி அறிக்கையின் அடிப்படையிலேயே விவாதத்தை நடத்துவது என்றும் நேற்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *