500 குளங்களைப் புனரமைக்கிறது சிறிலங்கா இராணுவம்
சிறிலங்கா இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 500 நடுத்தர அளவுடைய குளங்களை புனரமைப்புச் செய்யவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் களப் பொறியியல் பிரிவு குளங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 2016ஆம் அண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆளணியை நாட்டின் அபிவிருத்தி வேலைக்குப் பயன்படுத்தும் திட்டம் ஒன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே, குளங்களைப் புனரமைக்கும் வேலைகளில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஆசிரியர் விடுதிகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.